கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பூட்டானில் இன்று(புதன்கிழமை) முதல் அடுத்த 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. பூட்டானில் கொரோனா தொற்றுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டங்களுக்கு இடையேயான செயற்பாடுகளுக்கு நேற்று காலை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் திம்பு, பாரோ மற்றும் லாமொய்ஜிங்கா உள்ளிட்ட நகரங்களில் புது வகை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளூரில் புதிய வகை கொரோனா பரவலுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதனால் கடுமையான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என முடிவானது. எனவே டிசம்பர் 23ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
