யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர். இந்நிலையில், அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏற்றிய மாணவன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை ஆறு மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். இதனைறிந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்குச் சென்று தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்ததுடன் அறிவுறுத்தலை மீறினால் கைதுசெய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், நீண்ட இழுபறியின் பின்னர் இரவு 7.45 மணியளவில் பொலிஸாரின் தடைகளை மீறி பல்கலை வாயிலில் விளக்கேற்ற முற்பட்டபோது குறித்த மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
